தமிழகத்தை ஆட்சி செய்த மன்னர்களுள் தலைச் சிறந்தவன் கரிகாலன். ஒப்பாரும் மிக்காரும் இல்லாப் பேரரசன் என்று புகழப்படுபவன். கரிகாலன் சோழ நாட்டை வளமுடையதாக மாற்றி, இமயம் வரைப் படையெடுத்துச் சென்றான் என்பதற்காக இதைக் கூறவில்லை. கரிகாலன் தாயின் வயிற்றில் இருந்த போதே தந்தையை இழந்தவன். பிறந்த பிறகு தாயையும் இழந்தவன். வளர்ந்த போது தன் பகைவர்களிடம் நாட்டையும் இழந்தவன். அதற்குப் பிறகு போராடி தனக்குரிய சோழ உரிமையை மீட்டு, சோழ தேசத்தின் வேந்தனாக முடி சூடினான்.
கரிகாலனுக்கு எதிராக அணி திரண்ட சேரன் பெருஞ்சேரலாதன், பாண்டியன் பெரும்பெயர் வழுதி, பதினொரு வேளிர்கள் என்று அனைவரையும் போர்க்களத்தில் வென்று, தனது அரசுரிமையை நிலைநாட்டிய மாவீரன். தமிழக வரலாற்றில் யாராலும் நெருங்க இயலாத புகழின் உச்சியை அடைந்தவன் கரிகாலன்.
தோல்விகளால் துவண்டு, அனைத்தையும் இழந்து போயிருக்கும் நேரத்தில் கரிகாலனை மனதில் நினைத்தால் போதும், மன எழுச்சி கரை புரண்டோடும். அப்படிப்பட்ட வாழ்க்கை தான் கரிகாலனுடையது.
சோழர்கள் தங்களது வல்லமையை இழந்து குறு நில மன்னர்களாகி, புகழை இழந்து தஞ்சைக்கு அருகில் ஒடுங்கியிருந்த வேளையில் இக்கரிகாலனை முன்னுதாரணமாகக் கொண்டு தான் இழந்த புகழை மீட்டெடுத்து தெற்கே குமரி, வடக்கே கங்கை, கிழக்கே கடாரம் வரை வென்றனர். பிற்காலச் சோழர்கள் அன்றி முற்காலச் சேரர்களான இமயவரம்பன், நெடுஞ்சேரலாதன் மற்றும் செங்குட்டுவனுக்கும் முன்னுதாரணமாக விளங்கியவன் கரிகாற் பெருவளத்தான்.
தமிழக மன்னர்களுள் முதன் முதலில் இலங்கையை வெற்றி பெற்ற பிறகு இமயம் வரை படையெடுத்து வென்று தனது புலிச் சின்னத்தை இமயத்தில் பொறித்து போரில் தோற்ற பிற நாட்டு வீரர்களைக் கொண்டு காவிரிக்குக் குறுக்கே அணையைக் கட்டி, இரு புறங்களிலும் கரை எடுத்த மாபெரும் மன்னன் கரிகாற் பெருவளத்தான். சோணாட்டை சோறுடைத்த நாடாக்கிய பெருமையும் அவனையே சேரும்.
இந்தக் கரிகாலன் புதினத்தை வென்வேல் சென்னியின் தொடர்ச்சியாகவே எழுதியிருக்கிறேன். கரிகாலன் நாவல் எழுதி முடித்த பிறகு, வென்வேல் சென்னி – கரிகாலன் – வானவல்லி ஆகிய தொகுதிகள் தமிழின் முக்கியமான தொகுப்பாக இருக்கும் என்று நம்புகிறேன்.
Reviews
There are no reviews yet.